*"நான் யார் தெரியுமா?" விலிருந்து, "நான் யார்?" வரை.*
நான் யார் தெரியுமா?
என் அப்பா யாருன்னு தெரியுமா?
என் குடும்ப கௌரவம் என்னன்னு தெரியுமா?
என்னோட படிப்பு என்னன்னு தெரியுமா?
என் பண பலம் என்னன்னு தெரியுமா?
என் அரசியல் பலம் என்னன்னு தெரியுமா?
என் ஜாதி என்னன்னு தெரியுமா?
நான் எவ்வளவு தானதர்மங்கள் செஞ்சிருக்கிறேன் தெரியுமா?
நான் எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?
நான் யார் தெரியுமா?
நான் யார்? நான் இந்த உடலா? ஒரு நாள் இது இறந்து எரிந்து சாம்பல் ஆகிவிடும். இது ஜடம்.
நான் இந்த மனமா? ஒவ்வொரு கணமும் புதிய எண்ணங்கள். நேற்று இருந்த எண்ணம், இன்று இல்லை. இன்று இருக்கும் எண்ணம் நாளை இல்லை. எண்ணங்களின் குவியல் தான் மனம் என்றால், மனம் தான் நானா? இது இறந்த காலத்தை நினைத்து துன்பப்படுகிறது, எதிர் காலத்தை நினைத்து பயப்படுகிறது, நிகழ் காலத்தில் நிற்க்கச் சொன்னால் நிற்பதில்லை.
என்னுடைய உடல், என்னுடைய மனம், உடல் மனம் என்னுடையது. என்னுடைய உடைமைகள், அப்படியென்றால் நான் யார்?
பிறப்பதற்கு முன்னால் நான் எங்கு இருந்தேன்? எப்படி இருந்தேன்? இறப்பதற்குப் பின்னால் நான் எங்கு இருப்பேன்? எப்படி இருப்பேன்?
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"
என்கிறது வள்ளுவம்.
தூக்கம் சிறிய மரணம்,
மரணம் நீண்ட தூக்கம்.
இறைவன் இருக்கிறானா என்பது தெரியவில்லை, உலகம் இருக்கிறதா அல்லது இது என் கற்பனையா தெரியவில்லை. "நான் இருக்கிறேன்" என்பது மட்டும் தெரிகிறது. நான் யார்? கேள்வி இன்னும் நிற்கிறது.
எல்லோருக்கும் இந்த கேள்வி இருக்கிறது. இதை தெரிந்து கொள்ள, புரிந்து கொள்ள எவ்வளவு தீவிரமாக இருக்கிறோமோ அதை பொறுத்து இந்த "நான் யார்?" விசாரம் கைகூடுகிறது .
No comments:
Post a Comment